Tuesday, May 29, 2012

ஊட்டி முகாம் 2012

ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்,
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்!
முன்பு தேவர்கள்
ஒன்றாக அவி பங்கிட்டதுபோல
ஒன்றுகூடி சிந்தியுங்கள்,
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்!
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றேயாகட்டும்!
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக!
உங்கள் மனங்கள் இணைவதாக!
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்!
ஓம் ஓம் ஓம்.

- ரிக் வேத மந்திரம்
*
2011 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக ஊட்டி காவிய முகாம் பற்றி அறிய நேர்ந்தது. சென்ற வருடம் அது நடைபெற்ற நாள்களில் எனக்கு பெங்களூரில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பங்கு பெறுவது பற்றி யோசிக்க முடியவில்லை. போய் வந்தவர்கள் சிலரிடம் விசாரித்ததில் ஒரு நல்ல அனுபவத்தை இழந்துவிட்டோம் என்று தெரியவந்தது. 2012-இல் எப்படியும் பங்குகொள்வது என்று அப்போதே முடிவு செய்திருந்தேன்.

முகாமில் நடந்த அனைத்தையும் எழுத்தில் கொண்டுவருவது எனக்குக் கடினமான விஷயம். நான் இங்கு எழுதியுள்ளதை விடப் பன்மடங்கு சிறப்புமிக்க ஒன்றாக முகாம் இருந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
*

ஏன் முகாம் என்பதற்கான விடை மேலேயுள்ள ரிக் வேத மந்திரத்தில் இருக்கிறது. ஏன் ஊட்டி, ஏன் நாராயண குருகுலம் போன்ற வினாக்களுக்கு விடையளிப்பது கொஞ்சம் கடினம். இவை ஒருவர் நேரடி அனுபவத்தால் அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். இருந்தாலும் கட்டுரையின் கடைசிப் பகுதியில் விடையளிக்க முயன்றிருக்கிறேன்.

*
சுவாமி வியாச பிரசாத் வாழ்த்துரைகள் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். முன்னதாக ஜெமோ இந்த முகாம் பற்றிப் பேசியபோது இது இருபத்திரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிட்டார். எனக்கு பிரமிப்பாக இருந்தது. திரு. சுரேஷ் அவர்கள் முருகன் குறித்த ஒரு பக்திப் பாடலின் சில அடிகளைப் பாடியபின் திரு. நாஞ்சில் நாடன் அயோத்தியா காண்டத்தில் இருந்து தேர்ந்தெடுத்த சில பாடல்களின் மீதான உரையை ஆரம்பித்தார். அப்படித்தான் நினைத்தேன். நடந்ததோ வேறு!

அது உரையாக இல்லாமல் கலந்துரையாடலாகவே இருந்தது. ஜடாயு பேசியபோதும் இது தொடர்ந்தது. பின்னர் எல்லா அமர்வுகளும் இதே format ஐக் கொண்டிருந்தன. அயோத்தியா காண்டம் மீதான கலந்துரையாடலின் சில சுவாரஸ்யமான தருணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

குகப் படலத்தில் பரதனின் தோற்றத்தைக் காணுமுன் பெரிய யானைப் படை வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்று குகன் எண்ணுவதாக வருகிறது (...வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ...). ஆனால் பரதனின் தோற்றம் கண்டபின் முற்றாக மாறிவிடுகிறான்.

வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்முற்று நின்று(ஒ)ளிந்தான்.

இது குறித்துக் கதாகாலட்சேபம் செய்யும்போது சொல்வார்களாம். பெரிய யானைப் படை வந்தாலும் எதிர்ப்பேன் என்று எண்ணும் குகனை வீழ்த்த மூன்றே யானைகள் போதுமாம். அவை வற்கலையி னுடையானை, மாசடைந்த மெய்யானை, நகையிழந்த முகத்தானை ஆகியவை!

மாசடைந்த மெய்யானை என்று குறிப்பதில் இன்னொரு நயமும் இருக்கிறது. அவன் உடல் மாசுற்றிருக்கிறது. உள்ளம் தூய்மையாக இருக்கிறது. இதே போல தசரதன் கைகேயியிடம் மன்றாடும்போது நாட்டை வேண்டுமானால் எடுத்துக்கொள், ராமன் காட்டுக்குப் போக வேண்டாம் என்று வேண்டுவார். அதை மற்றதொன்றும் மறந்திடு... என்று பொருள்படும்படி கம்பர் பாடிச் செல்கிறார். ராமர் காட்டிற்குப் போகவேண்டும் என்பதைச் சொல்லக்கூட தசரதனால் முடியவில்லை.

மேலே சொன்ன இரண்டும் ஜடாயு கூறியவை.

கம்பராமாயணப் பாடல்களைக் காட்சிகளாக மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தால் மட்டுமே அவற்றின் நயம் நமக்கு விளங்கும். அவ்வாறு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தனிமையில் படிக்கும்போது மிகக் குறைவு. உதாரணமாக மந்திரப் படலத்தில் தசரதன் ராமனுக்கு முடிசூட்டுவது குறித்து மந்திரிமார்களிடம் ஆலோசனை கேட்டதும் அவர்கள் ஒரே நேரத்தில் அதுகுறித்து மகிழ்ச்சியும் (ராமனுக்கு முடிசூட்டுதல்) துயரமும் (தசரதன் இனி மன்னன் இல்லை என்பதால்) துயரமும் அடைகின்றனர். அதை இரண்டு கன்றினுக் கிரங்குமோ ராவென விருந்தார் என்று கம்பர் வருணிக்கிறார். முகாமில் இதை விளக்கியபோது எல்லோருமே அந்தக் காட்சியை மனக்கண்ணில் ஓட்டிப் பார்க்க முடிந்தது.

போலவே நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்று சீதை சொல்லுமிடம், பட்டாபிஷேகம் காண வரும் மக்கள் கூட்டம் பற்றிய இடம் (அவர்களுள் வேந்தரே அதிகம், வீரர்களே அதிகம், ஆண்களே அதிகம், பெண்களே அதிகம், இதுவரை வந்த கூட்டமே அதிகம், இனி வரவேண்டிய கூட்டமே அதிகம் என்ற பொருள்படும்படி வருவது), பின்னர் ராமன் காட்டிற்குச் செல்லவேண்டி வந்தது தெரிந்ததும் ஊரின் நிலை (ஆவும் அழுத அதன் கன்றும் அழுத எனத் தொடங்கும் பாடல்) என்று வருமிடம் போன்ற எல்லாக் காட்சிகளையும் கம்பன் காட்டுமளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவிற்காவது visualaise செய்து பார்த்துக்கொள்ள முடிந்தது.

அமலை என்றொரு ஆட்டம். போர் முடிந்த பிறகு வென்றது யார் என்று தெரிந்த நிலை ஆனால் இன்னும் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்போது வீரர்கள் ஆடும் ஆட்டத்திற்குப் பெயர் அமலை. இதைத் தெளிவுற விளக்கிப் பட்டாபிஷேகத்திற்கு முன்பான கொண்டாட்டங்களை அதனுடன் ஒப்பிட்டு நாஞ்சில் நாடன் கூறிய கருத்துகள் ஒரு புது திறப்பு. மேலும் திவ்யப் பிரபந்தத்தில் 700 பாடல்கள் ராமாயணம் தொடர்பானவை என்பதையும் பகிர்ந்துகொண்டார்.

ஜடாயு பேசியபோது குலசேகராழ்வாரின் தனித்துவம் பற்றிப் பேசினார். தேவகியாகத் தன்னை உருவகித்துக் கொண்டு நான் உன்னைச் சீராட்டவில்லையே என்று கண்ணன் குறித்த பாடல்கள் இருப்பதாகவும் தசரதனாகத் தன்னை எண்ணிக்கொண்டு புலம்புவது போல அமைந்த பாடல்கள் குறித்தும் கூறினார்.

கம்பராமாயண அமர்வுகளின் சிறப்பம்சமாக நான் கருதுவது ஒருவரையொருவர் இட்டு நிரப்பிய விதம்தான். ஜெமோ, நாஞ்சிலார், சுசீலா மேடம், ஜடாயு, மேலும் பங்குபெற்ற அனைவரும் தாம் அறிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். நாஞ்சிலார் பேசும்போது ஜடாயுவும், ஜடாயு பேசும்போது நாஞ்சிலாரும் மேலும் பல பொருத்தமான பாடல்களை நினைவு கூர்ந்தனர். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். கைகேயியின் வரங்கள், அதன் பின் மன்னனின் முடிவு குறித்து வெகுண்டெழும் இலக்குவனை ராமனால் சமாதானப் படுத்த முடிவதேயில்லை. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை... விதியின் பிழை நீ இதற்கு வெகுண்டதேன்... என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறான். இலக்குவன் அதுதான் விதியாயின் ...விதிக்கும் விதியாகும் என் வில்தொழில்... என்கிறான். கடைசியாக

நன்சொல் கடந்தாண்(டு) எனைநாளும் வளர்த்த தாதை
தன்சொல் கடந் தெற் கரசாள்வது தக்க தென்றால்
என்சொல் கடந்தாலுனக்கியாதுள தீன மென்றான்
தென்சொல் கடந்தான் வடசொல்கலைக் கெல்லை தேர்ந்தான்.

மேலேயுள்ள பாடலில் என் தந்தை சொல் கேட்பதென்பது எனக்கு தருமம். உனக்கு என் சொல் கேட்பது என்பது தருமமில்லை. மீறுவதால் தவறில்லை என்ற பொருள் தொனிக்கும்படி நிஷ்டூரமாக ராமன் கூறுகிறான். இவ்வாறு கூறியதும் இலக்குவன் சமாதானமடைகிறான். தமிழ் (தென்சொல்), வடமொழி (வடசொல்) இரண்டிலும் ராமனுக்கு இருக்கும் புலமையைக் கம்பர் இங்கே வெளிப்படுத்துகிறார்!

இவை போக பிற இலக்கியங்களில் இருந்து cross reference களும் செய்யப்பட்டன. வால்மீகி versus கம்பன் என்ற கோணத்தில் கருத்துகள் பகிரப்பட்டன. சில பாடல்களை ஜடாயு சந்தத்துடன் பாடிக் காட்டினார்.

மனப்பாடப் பாடல் பகுதிகளைத் தவிர மற்ற வகையில் கம்பராமாயணம் படிதிருக்காத எனக்குத் தனிப்பட்ட முறையில் குகப் படலம் நிறையப் பிடித்திருந்தது. பரதனைப் பற்றி  இவன் ஆயிரம் ராமனுக்குச் சமம் என்று குகன் எண்ணுமிடத்திலும், ராமனின் இளவல்கள் தீயோர் ஆகார் என்று எண்ணுமிடத்திலும் மானசீகமாகக் கம்பனின் காலில் விழுந்து எழுந்தேன்.

என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த ஒட்டுமொத்த அனுபவத்தை நம்மால் தனியே படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. எந்த உரையாசிரியரும் இந்த எல்லா விஷயங்களையும் தன் உரைக்குள் கொண்டுவந்துவிட முடியாது. இந்த முகாமின் வெற்றியே இதுதான் என்று நினைக்கிறேன்.

நான் மேலே குறிப்பிட்ட எல்லாம் கம்பராமயாணத்தின் மீதான அமர்வுகளில் பேசப்பட்ட விஷயங்களில் ஒரு துளி. கிட்டத்தட்ட ஒன்றரை நாள் பொழுதில் இன்னும் எவ்வளவு விஷயங்கள் பேசப்பட்டிருக்கும் / பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் extrapolate செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றைத் தாய்மொழியிலேயே கற்பதற்கான வாய்ப்பு நமக்கு இருப்பதாக ஜெமோ குறிப்பிடுவதை நாஞ்சில் நாடன் நினைவு கூர்ந்தார். ஒரு தேர்ந்த வாசகனாக விரும்பும் எவரும் இதிகாசங்களைப் படித்தாக வேண்டும் என்று நினைக்கிறேன். கம்பராமாயணத்திற்குள் போவதற்கு இந்த அமர்வுகள் அங்கு வந்திருந்த அனைவருக்கும் பேருதவியாக இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
*
கு. அழகிரிசாமியின் படைப்புகள் பற்றி விரிவாக அலசப்பட்டது. வெள்ளந்தியாக (innocent) இருந்ததால் வாழ்க்கை பற்றிய நேர்மறையான அணுகுமுறை அவரிடம் இருந்ததும் அவருடைய கதைகளில் அது தென்படுவது குறித்தும் பேசப்பட்டது. அவருடைய சமகாலத்தவரான புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்படும் எதிர்மறை அணுகுமுறை அழகிரிசாமியின் அணுகுமுறையோடு ஒப்பிடப்பட்டது.

ஒரு வரியில் பல விஷயங்களைக் கடந்து செல்லும் புதுமைப்பித்தனின்  மேதாவிலாசம் சிலாகிக்கப்பட்டது. இந்த இடத்தில் புள்ளின் வாய் கீண்டானை என்ற ஆண்டாள் பாசுரத்தை நாஞ்சில் நாடன் நினைவு கூர்ந்தார். அது எந்தப் புள், அதை ஏன் வதைத்தான் என்று ஆராய்ந்தால் அது ஒரு பெரிய கதை. ஆனால் அதை  ஆண்டாள் மூன்றே வார்த்தைகளில் கடந்து செல்கிறாள் என்றார்.

லாசராவின் எழுத்துகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. அடிப்படையான விஷயம் காமம். அதை ஒரு உன்னத நிலைக்கு அவர் தன் மொழி மூலம் எடுத்துச் செல்கிறார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அவருடைய கதைகள் கிட்டத்தட்ட எல்லாமே ஒரே கதை போல உள்ளன என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அபிதா நாவல் குறித்து நான் எழுதிய கட்டுரையை ஒட்டி ஜடாயு நீண்ட உரையாற்றினார். இது போன்றதொரு அமர்வில் என் கட்டுரையை ஒட்டி ஒருவர் பேசியதைப் பெரிய கவுரவமாக எண்ணுகிறேன்.

மற்ற எழுத்தாளர்கள் போல் எழுதுபவர்கள் நிறைய பேர் வந்துவிட்டாலும் லாசராவை இன்னும் யாரும் imitate செய்து எழுதிவிடவில்லை என்று நாஞ்சில் நாடன் கூறினார். பெரிய அளவில் சாக்த வழிபாடு நடக்கும் கேரளாவில் இருந்து கூட லாசரா பாணியில் யாரும் எழுதிவிடவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம் அளித்தது. அவருடைய எழுத்துகளில் கலாச்சார, சமூக, காலப் பிரக்ஞைகள் ஆகியவை இல்லாததை லாசராவின் வரம்புகளாக ஜடாயு கூறினார்.

தி. ஜானகிராமனின் மோக முள் குறித்து நீண்டதொரு விவாதம் நடைபெற்றது. யமுனாக்கள் இருக்கிறார்களா, பாபுக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வந்தபோது இதை ஒரு நவீனத்துவ அணுகுமுறையுடன படிக்க முடியாது என்று மோகனரங்கன் கூறினார். நாவல்களில் தி.ஜா. காட்டுவது ஒரு விடலைப் பருவ உலகம் என்றும் சிறுகதைகளில் அதைத் தாண்டிய பலவற்றைக் காட்டி இருப்பதாகவும் கூறப்பட்ட கருத்து பெருமளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அம்மா வந்தாள், செம்பருத்தி, மரப்பசு, நளபாகம் நாவல்களும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டன.

பதின்ம வயதில் இந்த நாவலைப் படித்த அன்பர் ஒருவர் தான் காணும் பெண்களில் எல்லாம் யமுனாவைப் பார்த்ததாகக் குறிப்பிட்டார்! நாவலைப் படித்த அனைவரும் ஒன்று யமுனாவைப் பார்த்திருக்கிறார்கள் அல்லது யமுனாவைத் தேடியிருக்கிறார்கள்.  (யமுனா என்ற பெயர் கொண்ட பெண்ணையாவது பார்த்துவிட மாட்டோமா? எனப் பைத்தியமாய் திரிந்த காலம் அது இளம் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்). இந்த நாவலின் வெற்றியே இதில்தான் அடங்கியுள்ளது என்று நினைக்கிறேன்.

கம்பராமாயணம் மீதான அமர்வுகள் குறித்துச் சொன்னதையே இங்கும் சொல்கிறேன். இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் குறித்தான அமர்வுகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் மிகச் சிலவற்றையே  இங்கே எழுதியிருக்கிறேன்.
*
முகாமின் மற்றொரு சிறப்பம்சம் காலை மாலை நடைகளும் அப்போது நடைபெறும் விவாதங்களும். சிலிகான் செல்ஃப் தளத்தின் ஆர்வி ஜெமோ பற்றிக் குறிப்பிடும்போது, அவரைப் போன்ற விஷயம் தெரிந்த நன்கு பேசக் கூடிய ஆள்கள் மிகக் குறைவு என்று குறிப்பிடுகிறார். அது எவ்வளவு உண்மை என்பதை நேர்ப்பேச்சில் நாமே கண்டறியலாம். வரலாறு, சிற்பம், புவியியல், நாவல் கோட்பாடு, கவிதை, இதிகாசங்கள், தனிப்பட்ட அனுபவங்கள், தத்துவம், மானுடவியல், சூழியல், திரைப்படம் என்று நீர் கண்ட இடமெல்லாம் வேர் பாய்வது போல விவாதங்கள் பல கோணங்களிலும் இருந்தன. நேற்றைய காலை நடையின் போது விவாதித்த வாத்தின் கண்ணின் அமைப்பு, தக்கையின் மீது நான்கு கண்கள் குறுநாவல், கும்பகோணத்தில் நடந்த வங்கி மோசடி, மீனின் தலைக்கு இருக்கும் ருசி, மகாபாரதம் பற்றிய சில விஷயங்கள் நெடு நாள்களுக்கு எனக்கு மறக்காது.

ஒவ்வொரு அமர்வின் ஆரம்பத்திலும் இரவு உணவிற்குப் பின்னும் ராமச்சந்திர சர்மா, சுரேஷ் ஆகியோரின் சங்கீதம் காதுகளுக்கு விருந்தளித்தன. சுரேஷ் பலகுரல்களில் பேசியும் அசத்தினார்.

இந்த நான்கு நாள்களில் மிக மிக மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்திருக்கிறேன். அதற்கு எத்தனை பேருக்கு நன்றி கூறுவதென்று தெரியவில்லை. ஒருவிதத்தில் எல்லோருக்குமே சொல்லியாக வேண்டும். ஏதோ ஒருவிதத்தில் இந்த நிகழ்விற்குப் பலமாக இருந்திருக்கின்றனர். அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஊட்டியின் தட்பவெட்பம், ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சூழல், உணவு, இவையெல்லாம் இந்த முகாமின் வெற்றிக்குப் பல விதங்களில் உதவி இருக்கின்றன. இரண்டரை நாள் தீவிரமான இலக்கிய முகாமிற்கு இது போன்ற சூழல் மிக அவசியம். இப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பகலில் மிதமான வெப்பம், நள்ளிரவில் குளிர், நடைபயிற்சி மேற்கொள்ளப் பச்சைப் பசேல் பிரதேசங்கள், ஒரு பெரிய ஹால், சுற்றிலும் புத்தகங்கள், மிதமானதும் balanced ஆனதும், தூக்கம் வரவழைக்காதுமான உணவு, சுற்றிலும் இலக்கியம் பேசும் அன்பர்கள்.

குறைகள் ஏதுமில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். விஷ்ணுபுரம் நாவலைப் படிக்க ஆரம்பித்தபோது என்னை அவ்வளவாகக் கவராத சில அம்சங்களை எழுதி வைத்திருந்தேன். போகப்போக நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் அடுத்து என்ன என்பதிலேயே கவனம் இருந்தது. முதலில் என்னைக் கவராத பகுதிகள் என்று நான் எழுதி வைத்திருந்தவை எனக்கே அபத்தமாகப் பட்டன. நீக்கிவிட்டேன். இதில் விசேஷம் என்னவென்றால் நாவலிலும் கிட்டத்தட்ட இது போல ஒரு கட்டம் வருகிறது!

சபை அவனையும் (அஜிதன்) பவதத்தரையும் மாறிமாறிப் பார்த்தபடி அமர்ந்திருந்தது. விவாதிக்கும் மனநிலை மங்கி, எதிர்பார்ப்பும் உத்வேகமும் மட்டுமே மிஞ்சியிருந்தது (பக்கம் 625, திருத்திய இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2000).

முகாம் குறித்த என் நிலைப்பாடும் அதுவே. குறைகள் என்று நான் எண்ணியவை எனக்கே அபத்தமாகப் படுகின்றன!
*
எழுத்துகள் வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை என்று நான் திடமாக நம்புகிறேன். நம் பலத்தில் எப்போதுமே பாதியை எடுத்துக் கொள்பவை. தனியாகப் படித்து இலக்கியத்தைப் புரிந்து கொண்டுவிடுவோம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. குறைந்தபட்சம் நம் புரிதல் சரிதானா, இன்னும் புரிந்துகொள்ள இதில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகவாது விவாதங்கள் தேவைப்படுகின்றன. இது போன்ற முகாம்கள் அவ்விவாதங்கள் நடைபெற உதவுகின்றன. தொடர்ச்சியாக இந்த முகாமை நடத்திவரும் ஜெமொவிற்கு / விஷ்ணுபுரம் வாசகர் வட்ட அன்பர்களுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எனக்கும் இதில் பங்கு கொள்ள வாய்ப்பு கொடுத்ததை ஒரு பெரிய கௌரவமாக எண்ணுகிறேன்.


சுவாமி வியாஸ பிரசாத் துவக்க உரையாற்றுகிறார்

கம்பராமாயண அமர்வின்போது


மாலை நடைக்கு இடையில் அமர்ந்து பேசியபோது

மாலை நடைக்கு இடையில்அமர்ந்து பேசியபோது

ராமச்சந்திர சர்மா பாடுகிறார்

Thursday, May 24, 2012

வழக்கு எண் 18/9

நல்ல படம். ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை.

திரைக்கதை அபாரம். இடைவேளை வரை போனதே தெரியவில்லை. Organic acid, inorganic acid பற்றிய விளக்கத்தோடு ஆரம்பிக்கும் தினேஷ்- ஆர்த்தியின் நட்பைப் பின்னால் வரும் காட்சிகளுடன் நன்றாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது. வேதியியல் பாடத்தைப் பொருத்தவரை அவனுக்குத் தெரிந்தது அது மட்டும்தான் போலும்.

அவரவர் பார்வையில் திரைக்கதை விரியும் உத்தி மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. வெகு நாள்களுக்குப் பிறகு நல்ல திரைக்கதை கொண்ட ஒரு படத்தைப் பார்த்த திருப்தி.

அடுத்தபடியாக பாத்திரத் தேர்வுகள். ஒவ்வொருவரின் தேர்வின் பின்னரும் எவ்வளவு உழைத்தார்களோ?

என்னை மிகவும் கவர்ந்தவர் இன்ஸ்பெக்டராக வருபவர். நடித்தது போலவே தெரியவில்லை. படத்தைத் தூக்கி நிறுத்துவதே அவர்தான். அடுத்தபடியாக ஜோதியாக வருபவர். முகச் சுளிப்புகளிலும், கண்ணசைவுகளிலும் கன்னா பின்னாவென்று ஸ்கோர் செய்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. அதற்கு அடுத்தபடியாக ஜோதியின் அம்மாவாக வருபவர். அவருடைய நடிப்பும் பிரமாதம்.

பிளாட்பாரக் கடைப் பையனாக வரும் ஸ்ரீயின் நடிப்பு பிரமாதம். டிரை-சைக்கிளை லாவகமாக ஓட்டுவது அவ்வளவு எளிதில்லை. எத்தனை நாள் கற்றாரோ? மொத்தத்தில் யாருமே முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கின்றனர். இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

காஸ்ட்யூம்கள் பிரமாதம். ரோட்டுக் கடையில் பணிபுரிபவன்-வீட்டு வேலை செய்யும் ஜோதி versus அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஆர்த்தி தினேஷ் என்று இரு extreme ஜோடிகள் இருக்கும் இதுபோன்ற படங்களுக்கு ஆடை வடிவமைப்பு கொஞ்சம் கஷ்டமான வேலை என்று நினைக்கிறேன்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு விலைமாதர் இருவர் பேசிக்கொண்டே போகும் காட்சி, முதல் பாதியில் அவ்வப்போது தலைகாட்டும் பிச்சையெடுக்கும் தம்பதியர், பரீட்சை நேரத்தில் மகளிடம் அதிகம் கேள்வி கேட்காமல் புரிந்துணர்வுடன் செயல்படும் அம்மா, இது போல இன்னும் நிறைய உள்ளன.இறுதிக் காட்சியில் ஜோதியின் முகத்திரை விலகி அவருடைய முழு முகமும் தெரிவது மிக முக்கியமான காட்சி.

முழுத் திரைக்கதையும் intensive ஆக இருக்கையில் இறுதிக் காட்சிகளில் ஜோதி நடந்துகொள்ளும் விதம் படத்தின் தீவிரத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி விடுகிறது. ஜோதியின் செயலை இன்னும் கொஞ்சம் convincing ஆகக் காட்டியிருக்கலாம். 

Wednesday, May 23, 2012

ஆதிசுஞ்சனகிரி (Adhichunchanagiri)

இணையத்தில் தேடியபோது எதேச்சையாக இந்த இடம் பற்றித் தெரிய வந்தது. இந்த இடத்தைப் பற்றிய கோவில் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன. அதிகம் கூட்டமும் இருக்காது என்று தோன்றியது. போய்ப் பார்த்து வருவது என்று முடிவுசெய்தோம்.

எந்த வழியில் போவது என்று முடிவு செய்வதில் பெரிய குழப்பங்கள் எதுவும் இருக்கவில்லை. காலை ஏழு மணிக்கே கிளம்பிவிட்டோம். நேரே எலெக்ட்ரானிக் சிடி நோக்கிச் சென்றோம். அங்கிருந்து நைஸ் ரோட்டைப் பிடித்து டும்கூர் ரோடு வரை சென்றோம். பின்னர் நெலமங்களா.

நெலமங்களாவில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. அங்கிருந்து ஹாசன் செல்லும் சாலையில் பிரிய வேண்டும். திருப்பம் வரும் இடத்தில பெயர்ப்பலகையைக் காணத் தவறிவிட்டேன். அதனால் சிறிது தூரம் கூடுதலாகப் பயணித்து U turn அடித்து மீண்டும் ஹாசன் சாலையைப் பிடித்தேன்.

இது நாழ்வழிச் சாலை. இருபுறங்களிலும் ஏகப்பட்ட மரங்கள். வழி நெடுகிலும் நல்ல உணவகங்கள். விநாயகா உடுப்பி என்ற ஓட்டலில் நிறுத்திக் காபி குடித்தோம். நல்ல ஃபில்டர் காபி.

தொடர்ந்து பயணம் செய்தால் ஒரு சுங்கச் சாவடி வரும். சில பணிகள் இன்னும் மிச்சமிருப்பதால் பணம் வசூலிப்பதில்லை. அதைத் தாண்டியதும் ஆதிசுஞ்சினகிரி செல்வதற்கான திருப்பம் வரும். வலப்புறம் திரும்பவேண்டும். ஒரு தோரண வாயிலும் உண்டு. இந்த இடத்தில் இருந்து மேலும் எட்டு கிலோமீட்டர் பயணம்.

கோவிலை நெருங்குமுன் இன்னொரு தோரண வாயில் வருகிறது. நுழைவுக் கட்டணம் (வாகனத்திற்கு) பத்து ரூபாய். அடுத்து நம்மை எதிர்கொள்வது கிட்டத்தட்ட நூறு படிகள் கொண்ட நுழைவாயில். முடிந்தவர்கள் ஏறலாம். முடியாதவர்கள் காரில் இன்னும் கொஞ்ச தூரம் பயணித்து வாகனங்கள் நிறுத்துமிடம் வரை சென்று அங்கிருந்து நடக்கலாம். ஆட்டோ இந்தப் படிக்கட்டுகள் வரை மட்டுமே வருகின்றன. வாகனம் நிறுத்துமிடம் வரை வருவதில்லை.

மர நிழலில் காரை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். கோயிலின் ஒருபுறம் அங்கிருந்தே தென்படுகிறது. அருகில் செல்லச் செல்லப் பிரகாரத்தின் ஜன்னல்கள் கண்ணில் படுகின்றன. கோவிலை நெருங்குமுன் படிக்கட்டுகள் வழியாக ஏறி வரும் வழி தென்படுகிறது. அதைத் தாண்டினால் காலணிகளை விடும் இடம்.

வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து காணக் கிடைக்கும் தோற்றம்



நுழைவாயில், மேலிருந்து



அங்கிருந்து கோவிலுக்குப் போகும் பாதையில் இருந்து கீழே பார்த்தோமானால் திருக்குளம் ஒன்று தெரிகிறது. ரம்யமான காட்சி. மாலை வேளைகளில் இன்னும் அழகாக இருக்கும்.

திருக்குளம்


கோவிலின் இன்னொரு தோற்றம்


மேலும் சிறிது தூரம் நடக்கிறோம். கோவிலின் பிரதான வாயிலை அடைந்துவிட்டோம். முதலில் நம்மை வியப்புக்குள்ளாக்குவது இறைவனின் வாகனம்தான்.

பைரவரின் வாகனம் - நாய்


சந்நிதியில் தூண்களில் ஒன்றில் இருக்கும் ஊர்த்துவதாண்டவர்


உற்சவர் குதிரை வாகனத்தில்



காலபைரவர் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். சந்நிதி முழுதும் காலபைரவர்களின் உருவங்கள். எப்படியும் பத்தடி உயரமிருக்கும்.

காலபைரவரை வணங்கிவிட்டுக் கோஷ்ட தெய்வங்களை வணங்குகிறோம். பார்வதி ஸ்தம்பாம்பா என்ற பெயரில் எழுந்தருளி இருக்கிறார்.

பிரகாரம் முழுதும் 128 தூண்கள் உள்ளன. எல்லாவற்றிலும் பைரவரின் சிலைகள்.

கோயிலை விட்டு வெளியே வருகிறோம். மலையை நோக்கிப் படிகள் செல்கின்றன. சில படிகள் ஏறி இடப்புறம் உள்ள நாகலிங்கத்தை தரிசிக்கிறோம். பின் மேலும் சில படிகள் கடந்ததும் வலப்புறம் ஒரு சிறு அறை போன்ற அமைப்பு வருகிறது. மரத்தாலான சுவர்கள். சிவன் இங்கே அமர்ந்து தவம் புரிந்ததாக ஐதீகம் (இதுபற்றி எனக்குச் சரியாக விவரங்கள் தெரியவில்லை. வேறு யாரேனும் இங்கே போய் வந்திருந்தால் உதவுங்கள். நன்றி).

நாகலிங்கம்

மலையில் ஏறும் வழியில் இருக்கும் விநாயகர் சிற்பம்


அதைத் தாண்டி மேலும் இருபது அல்லது முப்பது படிகள் ஏறினால் ஒரு பெரிய நந்தியைக் காண முடிகிறது. பக்கத்திலயே நீர் மோர் விற்பவர் இருக்கிறார். மோரைக் குடித்துவிட்டு நந்தியை தரிசித்துவிட்டு மேலும் சில படிகள் ஏறுகிறோம். மல்லேஸ்வரர் காட்சி தருகிறார்.

நந்தி



இன்னும் சில படிகள் ஏறினால் கங்காதீஸ்வரர் ஆலயம் வருகிறது. இதுவே மிக முக்கியமான ஆலயமாகக் கருதப்படுகிறது.

சோமேஸ்வரர் ஆலயம் செல்ல இங்கிருந்து கிட்டத்தட்ட நூற்றைம்பது படிகள் ஏறவேண்டி இருக்கிறது. ஆலயத்தை நெருங்க நெருங்கப் பாதை குறுகிக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் உட்கார்ந்து போக வேண்டிய நிலை. குகையின் உள்ளே இருப்பதால் ஒரே கும்மிருட்டு. நல்ல வேளையாக என்னிடம் கேமரா இருந்ததால் அந்த வெளிச்சத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. 

சோமேஸ்வரர்



கோபுரம் - வேறொரு கோணத்தில்




மேலதிகத் தகவல்கள்

அமைவிடம்: ஆதிசுஞ்சனகிரி, நாகமங்களா வட்டம், மண்டியா மாவட்டம், கர்நாடகா

தனி வாகனத்தில் பெங்களூரில் இருந்து வருவோர் குனிகல் கிராஸ் தாண்டியதும் வரும் சுங்கச் சாவடியை அடுத்துக் கொஞ்ச தூரத்திலேயே வலப்புறம் திரும்ப வேண்டும்.

பேருந்துகளில் வருவோர் (பெங்களூர் ஹாசன் மார்க்கம்) பெல்லூர் கிராஸில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து வரவேண்டும்.

பெங்களூரில் இருந்து இந்த இடம் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரில் இரண்டரை மணி நேரம் வரை ஆகும். பெல்லூர் கிராஸ் வரை பஸ்ஸில், பின் கோவில் வரை ஆட்டோவில் மூன்று மணி நேரம் வரை ஆகலாம்.   

இங்கே ஒரு கைடு இருந்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் கோவில்கள் பற்றி ஏதேனும் கையேடாவது தரலாம். அங்கிருக்கும் புத்தகக் கடையில் ஸ்தலபுராணமும் கிடைப்பதில்லை.

மிகவும் வயதானவர்கள் மலையேறி எல்லா லிங்கங்களையும் தரிசிக்க முடியாது. நாகலிங்க தரிசனத்தோடு முடித்துக் கொள்ளலாம்.

பெங்களூர் பெல்லூர் மார்க்கத்தில் நிறைய உணவு விடுதிகள் இருக்கின்றன. பெட்ரோல் பங்குகளும் உள்ளன. போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கூட இல்லை.

அருகிலுள்ள மற்ற க்ஷேத்திரங்கள் (எனக்குத் தெரிந்த அளவில்): துருவகேரே (ஹோய்சால பாணியில் அமைந்த கோயில்கள்), எடியூர் (சித்த்தளிங்கேஸ்வரா), ஷ்ரவண பெலகோலா (சமணர்களின் வழிபாட்டு ஸ்தலம்), நாகமங்களா (சௌமிய கேசவன் ஆலயம்).

பத்து மணிக்குள் கோவிலுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வெயில் வாட்டிவிடும்.

அவசியம் கேமரா கொண்டு செல்லுங்கள்.

கோவிலுக்குள் படம் எடுக்கலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஒருவர் எடுக்கலாம் என்றார். இன்னொருவர் கூடாது என்றார்.

கோவில் பற்றி மேலும் அறிய இந்தப் பதிவைப் பாருங்கள்.

மேலும் அறிய இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

ஐபிஎல் - 2

ஐபிஎல் -1 

நேற்றைய போட்டி

He talks like a winner என்று கம்பீரைப் பற்றி ஒரு வருணனையாளர் நேற்று குறிப்பிட்டார். வெறும் பேச்சு மட்டுமில்லை. He carries himself as a winner என்று நினைக்கிறேன்.

புனேயுடனான பந்தயத்தில் 140 சொச்ச ரன்களை வெற்றிகரமாக defend செய்து முடித்ததுமே கம்பீருக்குத் தோன்றியிருக்க வேண்டும், முதலில் பேட்டிங் செய்வதுதான் சரி என்று. நேற்று டாஸ் ஜெயித்ததும் பேட்டிங் என்று முடிவு செய்துவிட்டார்.

டேர்மாட் ரீவ் என்று நினைக்கிறேன். நேற்றைய போட்டியில் கேகேஆரின் பேட்டிங் approach பற்றிப் புட்டுப் புட்டு வைத்தார். எத்தனை ரன்கள் என்று முடிவு செய்திருக்கமாட்டார்கள். முதல் ஆறு ஓவர்கள் அடித்தாட வேண்டும். பின்னர் பந்திற்குத் தகுந்த மாதிரி ஆடவேண்டும். அவ்வளவுதான்.

கொஞ்ச நேரமே விளையாடினாலும் கம்பீரின் பேட்டிங் அருமை. இரண்டு ஷாட் பிட்ச் பந்துகளை சிக்ஸருக்கு விரட்டினார், அவற்றில் ஒன்று mistimed shot என்ற போதிலும். ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

யூசுஃப் பத்தான் ஏன் அணியில் இருக்கிறார் என்பதற்கான விடை நேற்று கிடைத்திருக்கும். அவர் கடைசி ஓவரில் அடித்த ரன்களை விட லக்ஷ்மி ரத்தன் சுக்லா அடித்த இரண்டு சிக்ஸர்கள் மிக முக்கியமாகப் படுகின்றன.

மூன்று ஸ்பின்னர்கள் என்பது இன்னொரு பெரிய பலம். பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும் ஜாக் காலிஸ் நன்றாகப் பந்து வீசினார்.

ஏன் கூடுதலாக இன்னொரு ஸ்பின்னரை இன்று சேர்க்கவில்லை என்று கேட்டதற்கு மற்ற எல்லா பவுலர்களும் முந்தைய ஆட்டங்களில் நன்றாகப் பந்து வீசியதால் யாரையும் நீக்க முடியவில்லை என்று ஷேவாக் கூறினார். இது ஏற்புடையதாக இல்லை. ஆடுகளம் சுழல் பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்கும் என்றால் (நிதர்சனமும் அதுதான்) அணியில் நிறைய சுழல் பந்து வீச்சாளர்களைச் சேர்த்திருக்கவேண்டும்.

வேணுகோபால் ராவ், நெகி ஆகியோரை டைலருக்கு முன் பேட்டிங் செய்ய அனுப்பியதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. டைலரை அவர்களுக்கு முன்னரே பேட் செய்ய அனுப்பி இருக்கவேண்டும்.

நேற்றைய போட்டியில் கேகேஆரின் ஒரே genuine வேகப் பந்து வீச்சாளர் காலிஸ் மட்டுமே. நமன் ஓஜா, ராவ் இருவரும் அவருடைய short pitch பந்துகளை அடிக்கமுடியாமல் தடுமாறினர். மிக மோசமான முறையில் இருவரும் அவுட் ஆகினர்.  

ஷாருக்கான் செய்தது கொஞ்சம் ஓவர் என்று நினைக்கிறேன். அணியின் ஓனர் கிரவுண்டில் இறங்கி ரசிகர்களைப் பார்த்து வணங்குவது, பறக்கும் முத்தங்கள் கொடுப்பது எல்லாம் சரியா என்று தெரியவில்லை. மற்ற அணியின் ஓனர்கள் இவ்வாறெல்லாம் செய்வதில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு செய்வதற்கெல்லாம் அனுமதி உண்டா என்றும் தெரியவில்லை.

Play offs

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை இங்கிலாந்து அணி அரை இறுதி / இறுதிப் போட்டி வரை முன்னேறும். ஆனால் தோற்றுவிடும். சில சமயங்களில் பரிதாபமாக இருக்கும். தொடர் முழுதும் சிறப்பாக விளையாடியதற்குப் பலனே இல்லை என்பது கசப்பான உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் மூன்று இறுதிப் போட்டிகள் வைக்கிறார்கள். இறுதிப் போட்டி வரை வந்து தோற்றுப் போகும் அணிக்கு மீண்டும் வெல்ல ஒரு வாய்ப்பு. சில நேரங்களில் மூன்றாவது போட்டிக்கான தேவை இருப்பதில்லை. முத்தரப்புப் போட்டிகளுக்கு இந்த முறை பொருத்தமானது.

ஐபிஎல் போன்ற பல அணிகள பங்கு பெறும் போட்டிகளில் play off முறை மிகச் சிறந்த ஒன்று என்று நினைக்கிறேன். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்லக் கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மூன்றாம் / நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிகள் கோப்பையை வெல்ல மேலும் மூன்று போட்டிகள் வென்றாகவேண்டும் என்பதும் நியாயந்தானே. எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்குக் கூடுதலாக ஒரு மேட்சைக் கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

சர்ச்சைகள்

We are going to remember this IPL for wrong reasons என்று நினைக்கிறேன்.
இந்த முறை off-field சமாச்சாரங்கள் சூடு பிடித்திருக்கின்றன. Match fixing, தாக்குதல், போதை மருந்து உட்கொள்ளுதல், ஷாருக்கானிற்கு வாங்கடே மைதானத்தில் நுழையத் தடை என்று விரும்பத்தகாத விஷயங்கள் நிறைய நடந்திருக்கின்றன.

Caught and bowled

சமீபத்தில் போட்டிகளின் நடுவே சில caught and bowled  dismisal-களைப் பார்க்க முடிந்தது. Steyn, Muralidharan, Raina, Kulkarni ஆகியோர் அருமையாகப் பிடித்தனர். இவை மட்டும் தனித் தொகுப்பாக எங்கேனும் கிடைத்தால் மீண்டும் ஒருமுறையாவது பார்க்கலாம்.

Monday, May 21, 2012

லேபாஷி

நீண்ட நாள்களாகப் போக வேண்டும் என்று நினைத்த இடம். கடந்த சனிக்கிழமையன்று சென்று வந்தேன்.

வழக்கம் போல எந்த மார்க்கத்தில் செல்வது என்ற குழப்பம். ஹோஸ்கோட்டே (Hoskote) தேவனஹல்லி (Devanhalli) சிக்கபள்ளபூர் (Chikkaballapur) பாகேபள்ளி (Bagepalli) லேபாஷி (Lepakshi) சாலை மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவுட்டர் ரிங் ரோடில் ஹெப்பால் வரை செல்வதற்குள் ஏகப்பட்ட சிக்னல்கள் குறுக்கிடும். அங்கிருந்து விமான நிலையம் தாண்டுவதற்குள் மேலும் பல சிக்னல்கள் வரும். அவற்றையெல்லாம் தவிர்க்கவே இந்த வழி.

வீட்டில் இருந்து ஹோஸ்கோட்டே வரை நான்கு வழிச்சாலை. அங்கிருந்து தேவனஹல்லி இரண்டு வழிச்சாலை. ஆனாலும் நன்றாகப் போடப்பட்டிருப்பதால் விரைந்து செல்லமுடிந்தது.  தேவனஹல்லியில் இருந்து பாகேபள்ளி வரை பெங்களூர் ஹைதரபாத் சாலையில் பயணம். மணிக்கு நூறு கிலோமீட்டர்  வேகத்தில் மிக எளிதில் செல்லலாம். வழியில் வரும் கிராமங்களைக் கடக்க மேம்பாலங்கள். எனவே எங்குமே வண்டியை நிறுத்த வேண்டிய / வேகத்தைக் குறைக்க வேண்டிய தேவையில்லை.

இந்த மார்க்கத்தில் நல்ல உணவகங்கள் நிறைய இல்லை என்பதால் வீட்டில் இருந்தே இட்லி கொண்டு சென்றிருந்தோம். ஓரிடத்தில் வண்டியை நிறுத்திக் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம்.

பாகேபள்ளியில் இருந்து ஆந்திர மாநிலத்தின் எல்லை ஆரம்பமாகிறது. அங்கே சுங்கம் செலுத்தவேண்டும் (போக வர 95 ரூபாய்). சுங்கச் சாவடியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் லேபாஷி செல்வதற்கான திருப்பம் வருகிறது. அங்கிருந்து லேபாக்ஷி வரை இருவழிச்சாலை. ரோடு கொஞ்சம் சுமார்தான்.

லேபாக்ஷியில் என்ன விசேஷம் என்று சொல்லாமல் உங்களையும் அதுவரை கூட்டி வந்துவிட்டேன்! இந்த ஊர் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இப்போது பார்த்துவிடலாம். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய ஊர் லேபாக்ஷி. இங்கு விஜய நகர பாணியில் கட்டப்பட்ட வீரபத்திரர் கோயில் ஒன்றுள்ளது. இந்தக் கோயிலில் காணக் கிடைக்கும் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை.

மீண்டும் பயணத்தைத் தொடர்வோம். ஊரை நெருங்கியதும் ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய நந்தியின் பின்புறம் கண்ணில் படுகிறது. பதினைந்து அடி உயரமும் இருபத்தேழு அடி நீளமும் கொண்ட இந்த நந்தி வீரபத்திரர் கோயிலுனுள்ளே இருக்கும் ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் லிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்துள்ளது. நியாயம்தானே! நந்தி சிவனைத்தானே பார்க்கவேண்டும்!! வருபவர்களையா பார்க்கவேண்டும்!!!

நந்தியைக் கடந்ததும் அரைக் கிலோமீட்டர் தொலைவிற்குள் சாலையின் இடப்புறத்தில் கோவிலின் தோரண வாயில் தெரிகிறது. உள்ளே நுழைகிறோம். வாகனம் நிறுத்தக் கட்டணம் இருபது ரூபாய்.

கோயில் ஒரு சிறு குன்றின் மீதமைந்துள்ளது. ஏறுவது கடினமே இல்லை. கிட்டத்தட்ட இருபது முப்பது படிகள் ஏறிச்சென்றால் நாட்டிய மண்டபத்தை அடையலாம். அந்த மண்டபத்தின் தூண்களில் ஏகப்பட்ட சிற்ப வடிவங்கள். அதைக் கடந்து உள்ளே சென்றால் வீரபத்திரர் காட்சி தருகிறார். ஆறடி உயரம், மீசையுடன் ஆஜானுபாகுவான தோற்றம்.

வீரபத்திரருக்கு வலப்புறம் சிவன் சந்நிதி. லிங்கத்திற்குப் பக்கத்திலேயே விரிசடையுடன் இருக்கும் சிவனின் கவசம் காணக் கிடைக்கிறது. லிங்கத்தின் மீது பூட்டுவார்களாக இருக்கும். சிவன் சந்நிதிக்கு நேரெதிரில் பெருமாள் சந்நிதி. துர்கா பரமேஸ்வரியின் சந்நிதி கருவறை மண்டபத்தில் தனியே உள்ளது. சந்நிதிக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியும் உள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது எல்லோரும் எளிதில் தரிசிப்பதற்காக அது வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்துத் தூண்களிலும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

கைடு யாரேனும் கிடைப்பாரா என்று தேடித் தேடிப் பார்த்தேன். என் நேரம் யாரும் கிடைக்கவேயில்லை. நாமாகவே சுற்றிப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

பிரகாரத்தில் ஒரு பெரிய ஏழுதலை நாகம் லிங்கத்திற்குக் குடை பிடிக்கிறது. இதைப் பற்றிச் சுவையான கதையொன்று சொல்கிறார்கள். சிற்பிகள் தங்கள் தாய் உணவு தயார் செய்யும் நேரத்தில் சும்மா இருக்கப் பிடிக்காமல் இதைச் செய்து முடித்தார்களாம்!

அதற்கு வெகு அருகில் கணபதி சிலை. மேலும் அந்தக் கல்லில் திருவானைக்கா, திருக்காளத்தி ஸ்தலபுராணங்களை நினைவூட்டும் சிற்பங்கள் இருக்கின்றன.

பக்கத்தில் ஒரு பெரிய திறந்தவெளி கல்யாண மண்டபம் இருக்கிறது. அதன் தூண்களிலும், ஆம், நீங்கள் நினைத்தது சரி, ஏராளமான சிற்பங்கள்.

இந்தக் கோயிலைக் கட்டியது வீரண்ணா, விருபண்ணா என்ற சகோதரர்கள். நடன மண்டபத்தின் மேற்கூரையில் நிறைய ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. சரிவரப் பராமரிக்கப்படாத காரணத்தால் அவை பெரும்பாலும் அழிந்து போயிருக்கின்றன:-( கன்னட மொழியில் அமைந்த கல்வெட்டுகள் நிறைய உள்ளன. விஜயநகரத்தின் புகழ்பெற்ற சிற்பியான ஜகனாச்சாரி இந்தக் கோவிலின் வடிவமைப்புத் திட்டத்தில் பங்கு பெற்றதாக நம்பப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள்

பெங்களூரில் இருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர்.

பேருந்து வசதிகள் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. ஆந்திர எல்லையில் வரும் செக்போஸ்ட் வரை சென்று அங்கிருந்து இந்துபூர் செல்கிற பேருந்துகளில் ஏறிச் செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் இந்துபூர் (14 கிலோமீட்டர்).

வழி நெடுகிலும் பெட்ரோல் பங்குகள் நிறைய உண்டு.

வழியில் சிக்கபள்ளபூர் தாண்டியவுடன் ஒரு காமத் ஓட்டல் இருக்கிறது. சாப்பாட்டை அங்கே வைத்துக்கொள்ளலாம். பெங்களூரில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கபள்ளபூர். தேவனஹல்லியில் இருந்து இந்த இடத்திற்கு அரைமணி நேரத்தில் வந்து விடலாம். மற்றபடி நல்ல ஓட்டல்கள் கிடையாது.

கேமரா அவசியம் கொண்டு செல்லுங்கள். கோவிலில் எப்பாடு பட்டாவது ஒரு வழிகாட்டியைத் தேடித் பிடியுங்கள்.

போக இரண்டு மணி நேரம், வர இரண்டு மணிநேரம், கோவிலில் இரண்டு மணிநேரம், சாப்பிட ஒரு மணிநேரம், ஆக மொத்தம் இது ஒரு நாள் பயணம்.

காலை ஒன்பது மணிக்குள் கோயிலுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெயில் கொளுத்த ஆரம்பித்துவிடும்.

பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவரும் போகலாம்.

Le Pakshi என்றால் ஓ பறவையே, எழுந்திரு என்று அர்த்தம். ராமாயணத்தில் ராமன் ஜடாயுவைப் பார்த்துக் கூறுவது. இந்த இடத்திற்கு ஏன் இந்தப் பெயர் என்று தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களுக்காகத்தான் கைடு வேண்டும்.

இங்கிருந்து பெனுகொண்டா, புட்டபர்த்தி, கதிரி ஆகிய ஊர்கள் அருகில் உள்ளன. பெங்களூரில் இருந்து லேபாக்ஷி போகும் வழியில் கொஞ்சம் உள்ளே சென்றால் நந்தி ஹில்ஸ், ரங்கஸ்தலா ஆகிய ஸ்தலங்களை தரிசிக்கலாம்.

கதிரி (Kadri)

லேபாக்ஷியில் இருந்து பெனுகொண்டா போகலாம் என்று ஹைதராபாத் மார்க்கத்தில் வண்டியைச் செலுத்தினேன். வழியில் கதிரி, புட்டபர்த்தி செல்வதற்கான திருப்பங்கள் குறுக்கிட்டன. கதிரி எவ்வளவு தூரம் என்று விசாரித்ததில் 43 கிலோமீட்டர் என்று பதில் வந்தது. பெனுகொண்டா செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு கதிரி போகலாம் என்று முடிவு செய்தோம்.

மிக அருமையான சாலை. பதினைந்து கிலோ மீட்டர் கடந்த நிலையில் ஒரு சந்திப்பு வந்தது. விசாரித்ததில் கதிரி அங்கிருந்து ஐம்பது கிலோ மீட்டர். போகலாமா வேண்டாமா என்று கொஞ்ச நேரம் யோசித்துப் போவதென்று முடிவு செய்து மேலும் பயணித்தோம்.

ரோட்டில் ஈ, காக்கை இல்லை. வெறிச்சோடி இருந்தது. அனந்தபூர் மாவட்டத்தில் நக்சல் முகாம்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தது வேறு அப்போது நினைவுக்கு வந்தது. நல்ல வேலையாக நிறைய பஸ்கள், தனியார் வண்டிகள் எதிரில் வந்தன. கொஞ்சம் தைரியம் வந்தது. இது முழுக்க முழுக்க இருவழிச் சாலை. சில இடங்களில் சாலை கொஞ்சம் மோசமாக இருந்தாலும் overall நல்ல சாலை.

நான்கு ராஜகோபுரங்களுடன் எழிலான தோற்றத்துடன் விளங்குகிறது கதிரி நரசிம்ஹர் கோவில். கோவிலுக்கு எதிரில் ஒரு சிறிய திருக்குளம். சனிக்கிழமையாதலால் நல்ல கூட்டம்.

நேரே நரசிம்ஹன் சந்நிதிக்குள் நுழைகிறோம். கருவறையில் எட்டுக் கரங்களுடன் ஹிரன்யகசிபுவை மடியில் போட்டு வதைக்கும் காட்சி. மூலவர் சுயம்பு மூர்த்தி. கதிரி மரத்தில் (Indian Mulberry) இருந்து தோன்றியதாக ஐதீகம். அருகிலேயே கூப்பிய கைகளுடன் பிரஹலாதன். உக்கிர ரூபத்தில் இருந்து சாந்தமாக மாறிக் கொண்டிருக்கும் நிலை என்று சொல்கிறார்கள். தாயார் அமிர்தவல்லி அம்மாள். பிரகாரத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதி ஒன்று உள்ளது.

கோவிலைச்  சேர்ந்த இடத்தில் தாங்கும் வசதிகள் உள்ளன. உணவகங்கள் போதுமான அளவில் இல்லை. பெங்களூரில் இருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளன. சுவையான லட்டு கிடைக்கிறது, திருப்பதி லட்டு போலவே!

தரிசனத்தை முடித்துக்கொண்டு பெங்களூர் நோக்கிப் பயணித்தோம். வழியில் ஓரிடத்தில் நிறுத்தி மதிய உணவு (வீட்டில் இருந்து எடுத்துச் சென்றது) உண்டோம். தேவனஹல்லி வரை ஒன்றும் சிக்கல் இல்லை. அதன்பின் கொஞ்சம் பாதை மாறிவிட்டேன். ஒரு பத்து கிலோமீட்டர் கூடுதலாகப் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.
அழகு மங்கை

கங்காளர் 

விநாயகர்

விநாயகர்

நடன மங்கை


வாத்தியத்துடன் நந்தி


ஒரே கல்லால் ஆன நந்தி

நாகலிங்கம்

நுட்பமான பின்னங்கால்கள், வால்


கோவில் பிரகாரம்

ஒகேனக்கல்

திட்டமிடல்

When there are too many options, I become indecisive. முதலில் எங்கே போவது என்று குழப்பம். அது முடிவானதும் எப்போது போவது? அதன் பிறகு எந்த வழியாகப் போவது? எப்படியோ போய் வந்தாகிவிட்டது.

ஒகேனக்கல் போகவேண்டும் என்று முடிவானதும் இப்போது போவதில் ஏதேனும் உபயோகமுண்டா என்று யோசித்தேன். கோடையில் நம் ஆறுகளின் லட்சணம் நமக்குத் தெரியுமே. மருந்துக்குக் கூடத் தண்ணீர் இருக்காது. கொஞ்சம் இணையத்தை நோண்டியதில் வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற தகவல் கிடைத்தது.

அடுத்தபடியாக எந்த வழியில் போவது? பெங்களூரில் இருந்து ஒகேனக்கல் செல்ல மூன்று வழிகள் உள்ளன. பெங்களூர்  ஓசூர்  ராயக்கோட்டை  ஒகேனக்கல் ஒருவழி. பெங்களூர்  அத்திப்பள்ளி  பாலக்கோடு  ஒகேனக்கல் இன்னொன்று. மூன்றாவது வழி பெங்களூர்  ஓசூர்  கிருஷ்ணகிரி  தருமபுரி  ஒகேனக்கல். இருப்பதிலேயே மூன்றவாது வழிதான் மிக நீண்ட வழி.

பெரும்பான்மையான தூரத்திற்கு நான்கு வழிச்சாலை, செல்லும் வழியில் நல்ல உணவகங்கள் ஆகிய காரணங்களால் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன். திரும்பி வரும்போது வரும்போது கிருஷ்ணகிரி அணையையும் பார்க்கலாம் என்று ஒரு எண்ணம்.

ஒகேனக்கல் நோக்கி...

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி தருமபுரி வழியாகச் சென்றால் ஒகேனக்கல்லுக் கிட்டத்தட்ட 185 கிமீ தூரம். காலை ஏழு மணியளவில் வீட்டை விட்டுக் கிளம்பினோம். Electronic City  இல் சுங்கம் (35 ரூபாய், போய் வர) கொடுத்துவிட்டு ஓசூரை நோக்கிப் பறந்தேன். மறுபடியும் சந்தபுராவில் மீண்டும் சுங்கம் (55 ரூபாய், போய்வர). கிருஷ்ணகிரிக்கு முன் வரும் சின்னார் (Chinnaar) என்ற சிறு கிராமத்தை அடுத்து வரும் அடையாறு ஆனந்த பவனில் சிற்றுண்டிக்காக வண்டியை நிறுத்தினேன்.

உணவகங்கள்

ஓசூர்  கிருஷ்ணகிரி சாலையில் வரும் உணவகங்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஓசூரில் இருந்து வரும்போது முதலில் காமத் வரும். கர்நாடக பாணி உணவு வேண்டுமெனில் இங்கே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். நான் உத்தரவாதம்.

அடுத்து வருவது கிருஷ்ணபவன். இங்கே ஒரு காஃபி டே உண்டு. கூட McDonalds  உம். அதற்கடுத்து வருவது அடையாறு ஆனந்தபவன்.

இதில் அடையாறு ஆனந்த பவனில் மட்டும் self service. மற்ற இடங்களில் service உண்டு. எல்லா ஓட்டல்களை ஒட்டியும் பெட்ரோல் பங்க் உண்டு. நல்ல கழிவறை வசதிகள் உண்டு. வண்டிகள் நிறுத்த ஏராளமான இட வசதி உண்டு.

பொதுவாகப் பேருந்துகளை இந்த இடங்களில் நிறுத்தமாட்டார்கள். வேறெங்காவது அவ்வளவாகத் தரமில்லாத இடங்களிலேயே நிறுத்துவார்கள். எனவே வீட்டிலிருந்தே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். வார இறுதிகளில் நிறைய நெரிசல் இருக்கும். ஏகப்பட்ட வாடகைக் கார்களும் சொந்தக் கார்களும் சர் சர் என்று பறக்கும். கிராமங்கள் குறுக்கிடும்தோறும் எச்சரிக்கை தேவை. அலட்சியமாகச் சாலையை மக்கள் கடப்பார்கள். அது போக போக ராங் சைடில் டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள்  வரும்.

பயணம் தொடர்கிறது...

நிற்க, அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டு முடித்ததும் கிருஷ்ணகிரி நோக்கி விரைந்தேன். இங்கும் சுங்கம் கட்டவேண்டும் (80 ரூபாய், போக வர).

உங்கள் அல்ஜீப்ரா அறிவைச் சோதித்துக் கொள்ள இப்போது நல்ல வாய்ப்பு. போகவும் வரவும் சுங்கக் கட்டணம் சமம், தனித்தனியாகக் கட்டினால்.  மொத்தமாகக் கட்டினால் வருவதற்கான சுங்கக் கட்டணத்தில் 40% கழிவு கிடைக்கும். அப்படியென்றால் கிருஷ்ணகிரி சாவடியில் போவதற்கு மட்டும் நான் கட்டிய தொகை எவ்வளவு?

தருமபுரி நோக்கி விரைந்தேன். அங்கிருந்து இருந்து சேலம் செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் ஒகேனக்கல் போவதற்கான சாலை பிரிகிறது. ஒரு பாலத்தின் அடியில் சென்று வலப்புறம் திரும்பவேண்டும். பெயர்ப்பலகைகள் உள்ளன. இங்கிருந்து இருவழிச்சாலை, ஆனாலும் நன்றாகப் போடப்பட்டிருப்பதால் விரைந்து போக முடிகிறது.

காட்டுப் பகுதியில் நுழையுமுன் முப்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கவேண்டும். பின்னர் அங்கிருக்கும் வனக்காவலரிடம் வண்டி குறித்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். அவர் ஒரு ரெஜிஸ்டரில் அதைப் பதிந்துவிட்டு நம்மைக் கையெழுத்திடச் சொல்கிறார்.

காட்டுப் பாதை முழுதும் வெறும் மரங்கள், மரங்கள், மரங்கள். மலையில் வேறு ஏறி இறங்கவேண்டும். கொஞ்ச தூரத்திற்குத்தான். மூன்று (அல்லது நான்கு) கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. முந்திச் செல்ல முயலாதீர்கள் என்ற வாசகத்துடன் கூடிய பலகை பல இடங்களில் கண்களில் பட்டது. நம் ஆள்கள் மண்டைகளில் அது ஏறினால்தானே:-(

அடுத்து ஒரு சிறு பாலம். இங்கே வாகன நிறுத்தக் கட்டணம் என்ற பெயரில் பதினைந்து ரூபாய் கொடுக்கவேண்டும். பாலத்தைத் தாண்டியதும் பேருந்து நிலையம். பெரிதாக ஒன்ருமில்லை. பஸ்கள் அங்கே நிற்கின்றன, அவ்வளவுதான்.

ஒகேனக்கலில்...

அடுத்து வாகனத்தை எங்கே நிறுத்துவது என்கிற குழப்பம். அருவி எங்கே என்ற குழப்பம். பரிசல்துறை எங்கே என்ற குழப்பம். பெரும்பாலான வாகனங்கள் எந்தத் திசையை நோக்கிச் சென்றனவோ நானும் அந்தத் திக்கிலேயே போனேன் (பேருந்து நிலையத்தில் இருந்து இடப்புறம், ஒகேனக்கல்லுக்குள் வரும்போது). கொஞ்ச தூரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் வந்தது (தமிழ் நாடு ஓட்டலின் வெளிச்சுற்றுச் சுவர்). கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேம்.

நடக்க ஆரம்பித்துக் கொஞ்ச தூரத்திலேயே காவிரி கண்ணில் பட்டது. பரிசல் துறை வந்துவிட்டது! மீண்டும் குழப்பம், முதலில் குளியலா அல்லது பரிசல் சவாரியா? குளிப்பதென்றால் எங்கே போய்க் குளிப்பது?

முதலில் சவாரி என்று முடிவானது. ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருந்தோம். குளிப்பதற்கு வேண்டிய, குளித்தபின் அணியவேண்டிய மாற்றுடைகளைக் கையில் வைத்திருந்தோம்.

நாங்களோ மூன்று பேர். பரிசல் காரர் இன்னும் மூன்று பேராவது வேண்டும் என்றார். பெங்களூரில் இருந்து வந்திருந்த இன்னொரு தம்பதியர் எங்களுடன் இணைந்துகொண்டனர்.

பரிசல் சவாரிக் கட்டணம் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கட்டணம் குறித்து அங்கே ஒரு பலகையில் தெளிவாகப் போட்டிருக்கின்றனர். ஆனால் கூடுதலாகக் கேட்பார்கள். மேலும் பரிசல் ஒட்டுபவருக்கும் சவாரி முடிந்ததும் ஏதாவது போட்டுத் தரவேண்டும்.

நிறைய பேரம் பேசிப் பயனில்லை. எல்லோரும் ஒரே மாதிரிதான் கேட்பார்கள்! நிறைய நேரம் பேரம் பேசுவது நேரத்திற்கும் மன நலனுக்கும் கேடு. சுற்றுலா வந்த நோக்கமே கேள்விக்குறி ஆகிவிடும்.

பரிசலில் ஏறி உட்கார்வதே பெரிய வித்தையாக இருக்கிறது. பெரியவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். கொஞ்ச தூர சவாரிக்குப் பிறகு இறங்கச் சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான என்று எல்லோர் முகத்திலும் பீதி. அந்தப் பக்கம் போகணும். அதுக்குப் பரிசலில் போகமுடியாது. அருவியில் அடிச்சுக் கொண்டு போயிடும். இறங்கி நடங்க. நானும் பின்னாடியே வரேன் என்றார் துடுப்பு வலிப்பவர். ஒன்றும் புரியவில்லை. நடந்தபோதுதான் தெரிந்தது, பரிசலை மேலும் செலுத்தினால் அது நேரே அருவிக்குப் போய்விடும்.

கொஞ்ச தூர நடைக்குப் பிறகு கிட்டத்தட்ட நாற்பது படிங்கள் இறங்கவேண்டி வந்தது. அங்கே மீண்டும் பரிசலில் ஏறினோம். ஏறிய கொஞ்ச நேரத்தில் கண்களுக்குப் பெரிய விருந்து. சோ வென்ற சத்தம் எல்லா இடங்களில் இருந்தும். மொத்தம் ஐந்து அருவிகளைக் காட்டினார் பரிசல்காரர். ஒரு அருவிக்கு வெகு அருகில் சென்று கொஞ்ச நேரம் நிறுத்தினார். சாரலில் முழுதும் நனைந்துவிட்டோம்.

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போகலாமா?’ என்று வினவினார் எங்களுடன் வந்திருந்த ஜோடியில் இருந்த பெண். பரிசல்காரர் சிரித்துவிட்டு ஆபத்துங்க என்றார். அந்த இடத்தை விட்டு நகர மனமே இல்லாமல் நகர்ந்தோம்.

வழியில் இன்னொரு பரிசலில் புகைப்படக் காரர் ஒருவர் இருந்தார். அருவி பின்னணியில் இருக்கப் போட்டோ எடுத்துத் தருவதாகச் சொன்னார். நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் பல மீன்பிடி பரிசல்கள், நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டில்கள் விற்பவை.

இந்தப் பரிசல் சவாரி தந்த அனுபவத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பொதுவாகப் படகு / பரிசல் சவாரி என்றால் ஒரு பரந்த நீர்ப்பரப்பில் இருக்கும். இங்கே அவ்வாறு இல்லை. இருபுறமும் ஐம்பதடி உயரத்தில் இருக்கும் மலைகள். நடுவில் ஆறு. வித்தியாசமான அனுபவம். ஒருமுறை அனுபவித்தால்தான் புரியும்.

கிட்டத்தட்ட ஐம்பது அடி உயரத்தில் இருந்து வாலிபர்கள் தண்ணீரில் குதித்துக் கொண்டிருந்தனர். அடுத்த முறை அதையும் செய்துபார்க்க வேண்டும். நாமதான் யூத்தாச்சே:-) வழியில் பரிசல்காரர் அங்கு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிக் குறிப்பிட்டார். இணைந்த கைகள், செல்வா, ராவணன், இந்தியன், ஜெகன்மோகினி ஆகியவை அவற்றில் சில.

பரிசல்காரர் 'நீச்சல் தெரியுமென்றால் தண்ணீரில் குதியுங்கள்' என்றார். எனக்கோ கொஞ்சம் பயமாக இருந்தது. நதியில் நீந்தி வருடக் கணக்காகிறது. 'கரை எங்கே' என்று கேட்டேன். 'இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு மணல் மேடு வரும். அங்கே ஆழம் கம்மியாயிடும். அங்கே ஏறிக்கலாம்' என்றார். 

மணல்மேட்டிலிருந்து ஒரு ஐம்பது அடி தொலைவில் பரிசலில் இருந்தபோது தண்ணீரில் குதித்தேன். ஆச்சரியம்! நான்கைந்து முறை கை கால்களை நீட்டிப் போட்டதும் கரை வந்துவிட்டது!! இதற்கா இவ்வளவு பயந்தேன்:-(

அங்கேயே கொஞ்ச நேரம் குறுக்கும் நெடுக்குமாக நீந்தினேன். இன்று காலை எழுந்ததில் இருந்து இரு தோள்களிலும் கொஞ்சம் வலி. ஆனாலும் சுகமாக இருக்கிறது!

அதே இடத்தில் சுடச்சுட ஆற்று மீனை வறுத்து விற்கிறார்கள். மீனின் அளவிற்கேற்றவாறு பணம். ஒரு துண்டு இருபது ரூபாய். முழுமீன் ஐம்பது ரூபாய்.

மசாஜ் செய்துவிடவும் ஆள்கள் உண்டு.

குளியல் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியில் ஒரு சிறு அருவி இருக்கிறது. அங்கே குளிக்குமாறு பரிசல்காரர் அறிவுறுத்தினார்.

இதுதாங்க இயற்கையா தண்ணி ஊத்துற இடம். மேலே உள்ளதுல கட்டடம் கட்டித் தண்ணியோட வேகத்தைக் குறைச்சிருக்காங்க என்றார்.


அங்கே குளிக்க இறங்கினேன். தண்ணீரில் கால் வைத்ததுதான் தாமதம், மீன்கள் காலைக் கடிக்க ஆரம்பித்துவிட்டன. ஐந்தே நிமிடங்களில் பாதத்தில் முகம் பார்க்கலாம், அந்த அளவிற்குக் கச்சிதமான வேலை:-)


அருவியை நெருங்க முடியவில்லை. நீர் விழும் வேகம் மீண்டும் மீண்டும் கீழே பிடித்துத் தள்ளியது. ஒருவழியாகப் பக்கவாட்டுப் பாதையில் போய்க் கைகளைக் கற்களின் மேல் உறுதியாக ஊன்றித் தலையை நீர் கொட்டும் இடத்திற்கு நேரே நீட்டினேன். தலையில் தப தப வென்று கற்கள் விழுந்தன போலிருந்தது. கொஞ்சம் பாலன்ஸ் தவறியது. கீழே விழுந்தேன். மீண்டும் பக்கவாட்டு வழியாக இன்னொரு முறை ஏறி... மீண்டும் விழுந்தேன்.


மீண்டும் பரிசலில் ஏறினோம். வழியில் நுங்குகள், குழிப் பணியாரங்களை உள்ளே தள்ளினோம். கரைக்குத் திரும்பியதும் பருப்பு போளிகள் பல உள்ளே சென்றன.


அங்கிருந்து முதன்மை அருவிக்குச் சென்றோம். பார்க்கவே அவ்வளவு நன்றாக இல்லை. நீர்வீழ்ச்சியின் வேகத்தைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஏகப்பட்ட நெரிசல். கரையேறவே முடியாத சூழல். ஆம், கரையேற நினைத்தபோதெல்லாம் மற்றவர்கள் போட்டுக் குளிக்கும் சிகைக்காய் / சோப்பு நம்மேல் தெளிக்கிறது!


ஒருவழியாகக் கரையேறி மீண்டும் ஒரு இடத்தில் குளித்தேன். முதன்மை அருவிக்குப் போகும் வழியில் ஒரு முருகன் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர், கருடன் உருவங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை வரவேற்பது ஒரு பெரிய விநாயகர் சிலை.


கோவிலைப் பார்த்து முடித்ததும் நீர்மோர் குடித்தேன். வெயிலுக்கு இதமாக இருந்தது. பக்கத்திலேயே இருக்கும் மீன் மார்க்கெட்டைப் பார்வையிட்டேன். கெண்டை மீன் கிலோ எண்பது ரூபாய். பெங்களூரில் (மடிவாலா மார்க்கெட்) நூறு ரூபாய்.


பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் திரிபுரசுந்தரி சமேத தேசநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோஷ்டங்களுள் அருள் பாலிக்கும் தெய்வங்களுள் காவேரியம்மனும் உண்டு. மிகச் சிறிய கோயில். நன்றாகப் பராமரிக்கிறார்கள்.


பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு முதலைப் பண்ணை இருக்கிறது. நுழைவுக் கட்டணம் ஒரு ஆளுக்கு ஒரு ரூபாய். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் சாத்தனூரில் இருக்கும் முதலைப் பண்ணையை விட இது பெரிது என்று நினைக்கிறேன். பல சைஸ்களில் முதலைகள் காணக் கிடைக்கின்றன.


மேலதிகத் தகவல்கள்


இந்த ஊருக்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஆனால் கோடை விடுமுறையின்போதும் பருவ மழைக்குப் பிறகும் நல்ல கூட்டம் இருக்கும். பேருந்துகள் நிரம்பி வழியும்.


புகைவண்டியில் செல்வதென்றால் சேலம், தருமபுரி, மொரப்பூர் ஆகியவை ஒகேனக்கல்லுக்கு அருகிலுள்ள நிலையங்கள். இவை முறையே ஒகேனக்கலில் இருந்து 120, 48, 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.


வாகனங்களை நிறுத்த நிறைய இட வசதிகள் உள்ளன.


நல்ல சைவ சாப்பாடு கிடைப்பதில்லை. தருமபுரிக்கோ அல்லது அருகிலிருக்கும் பென்னாகரத்திற்கோ (17 கிலோமீட்டர்) வந்தாகவேண்டும். அல்லது சாப்பாட்டைக் கையில் எடுத்துக்கொண்டு போவது நல்லது.


அருவியை ஒட்டிய பகுதிகள் அவ்வளவு சுத்தமாக இல்லை. நான் பார்த்தவரையில் ஒரு குப்பைத்தொட்டி கூட இல்லை. இடம் சுத்தமாக இல்லாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

காலை பத்து மணிக்குள் அங்கே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மதியம் மூன்று மணிக்குள் ஆசை தீரப் படகுச் சவாரி, அருவியில் குளியல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு விடலாம்.

மழைக்காலத்தில் படகுச் சவாரி கிடையாது. பருவமழை முடிந்த பிறகு சவாரி உண்டு. அப்போது ஆற்றின் ஆழமும் அதிகமாக இருக்கும். பரிசல் சவாரி செய்யும் பாதையும் வேறு.


ஒகேனக்கல் என்றால் புகையும் கல் (smoking rock) என்று அர்த்தம். சாரலைத் தூரத்தில் இருந்து பார்த்தால் பெயர்க்காரணம் எளிதில் விளங்கும்.

நதியின் ஒருகரை தமிழ் நாட்டிற்கும் மறுகரை கர்நாடகாவிற்கும் சொந்தம். 

பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் பிடித்துப் போகக் கூடிய ஒரு இடம். வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை(யாவது) சென்று வாருங்கள். 

பெங்களூர் நோக்கி...


திரும்பும் வழியில் கிருஷ்ணகிரி அணையையும் பார்த்தோம். கிருஷ்ணகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தருமபுரிக்குச் செல்லும் வழியில் இது இருக்கிறது. பிரதான சாலையில் ஒரு தோரண வாயில் உண்டு. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர். நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு நான்கு ரூபாய். வாகனங்களுக்குத் தனி. காருக்குப் பதினைந்து ரூபாய்.


பரந்த நீர்ப்பரப்பு, அதன் பின் தெரியும் மலைகள், அந்தியில் சூரியன் சிவப்புக் கோளமாக நீரில் மறையும் காட்சிகளைக் காணப் பிடிக்குமெனில் இங்கே ஒருமுறை போய்வரலாம். சிறுவர்கள் விளையாட ஒரு பூங்காவும் இருக்கிறது.


அணையைப் பார்த்து முடித்துவிட்டு பெங்களூர் நோக்கி விரையும் வழியில் கிருஷ்ணகிரியில் வாசவி என்ற விடுதியில் காப்பி குடித்தோம். சுமார்தான். ஓசூரில் இருக்கும் சந்திர சூடேஸ்வரர் கோயிலை வேறொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்தோம்.


பிரசித்தி (?!) பெற்ற எலெக்ட்ரானிக் சிடி  சில்க் போர்ட் டிராபிக்கில் மாட்டிக்கொண்டோம். மேம்பாலத்தில் கூட வண்டிகள் வரிசையாக நிற்க வேண்டிய சூழல். அங்கிருந்து வீட்டிற்கு வர ஒரு மணி நேரமானது.



பெருக்கெடுத்து ஓடும் காவிரி


புகையும் மலை




இந்த மணல்மேட்டிற்கருகே நீந்திக் குளிக்கலாம்


சுவையான போளி  தயாராகிறது!


தாளபள்ளம் (பென்னாகரம் - தருமபுரி சாலை) என்ற இடத்தில் வரும் அய்யனார் கோயில்


கிருஷ்ணகிரி அணையும் பின்னணியில் மூன்று மலைச் சிகரங்களும்


கிருஷ்ணகிரி அணை - நீரில் கதிரைப் பாய்ச்சும் சூரியன்